சென்னை

பிரபல மூத்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நாட்டில் நடைபெறும் வன்முறை சம்பவங்கள் குறித்து பேசாமல் இருப்பது ஏன் என நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருபவர் பிரகாஷ் ராஜ்.     இவருடைய நண்பரும் பிரபல பெண் பத்திரிகையாளருமான கௌரி லங்கேஷ் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அவர் வீட்டு வாசலில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.   அதனால் அதிர்ச்சி அடைந்த பிரகாஷ் ராஜ் அது முதல் பல சமுதாயக் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

சமீபத்தில் நாடெங்கும் சிறுமிகள் கடத்தல், பலாத்காரம்,  கொலைகள் அதிகம் ஆவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருபவர்களில் பிரகாஷ் ராஜும் ஒருவர் ஆவார்.   இவர் தனது சக நடிகர்கள் பலரும் இதை எதிர்க்காமல் இருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெண் குழந்தைகளைக் காப்போம் என்னும் மத்திய அரசின் இயக்கத்துக்கு பிரபல மூத்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஒரு நல்லெண்ணத் தூதராக இருந்து வருகிறார்.   ஆயினும் இதுவரை அமிதாப் பச்சன் இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

இது குறித்து பிரகாஷ் ராஜ் அவரிடம் கேள்விகள் கேட்டுள்ளார்.   பிரகாஷ் ராஜ் தனது முகநூல் பதிவில்,

“நீங்கள் ஒரு பெரிய மனிதர்.   உங்களை நாங்கள் மிகவும் மதிக்கிறோம்.   எதிர்கால தலைமுறை உங்களைப் பார்த்து “சமூகம் அபாயத்தில் இருந்த  போது நீங்கள் ஏன் அமைதி காத்தீர்கள்?” என உங்களைக் கேட்கக் கூடாது.

ஐயா, உங்கள் குரலுக்கு  அதிகம்   மதிப்புள்ளது.   தயவு செய்து ஏதாவது பேசுங்கள்.   பேசாமலிருப்பதற்கு தங்கள் வயதும் முதுமையும் ஒரு காரணம் என பொய்யான காரணங்கள் கூற வேண்டாம்.

நீங்கள் கவிதைகள் அறிந்த அற்புத மனிதர்.    உங்கள் குரல் இப்போது தேவைப்படுகிறது.    உங்களிடமிருந்து யாரும் எதையும் எடுத்துச் செல்ல முடியாது   சொல்லப்போனால் நீங்கள் தான் பலரைக் காப்பாற்றி வருகிறீர்கள்.   இந்த நேரத்தில் நீங்கள் உதவி புரியவில்லை எனினும் தங்கள்  மனதில் உள்ளதை தெரிவிக்கலாமே.

இந்த சம்பவங்களைக் கேட்கும் போது நான் உடைந்து போகிறேன்.    இதுபற்றி பேசுவதும் பேசாததும் உங்கள் விருப்பம் என்பது உண்மையே.   ஆனால் நீங்கள் இதைப் பற்றி பேசியதெல்லாம்    இந்த தகவல்கள்  அசிங்கமானது என்பதும் இதைப் பற்றி பேசுவது அசிங்கமானது என்பது மட்டுமே ஆகும்.

இந்த துயருக்குள்ளானவள் எனது மகள் அல்லது யாருடைய மகளாகவும் இருக்கலாம்.  அதை மனதில் கொண்டு சிறிது வாயைத் திறக்கலாமே”

என பதிந்துள்ளார்.