அனூப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து, தயாரித்த படம் ‘வரனே அவஷ்யமுண்டு’. பிப்ரவரி 7-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது.

இந்தப் படம் சில நாட்களுக்கு முன்புதான் டிஜிட்டலில் வெளியிடப்பட்டது. இதில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டிக் காட்சிப்படுத்தியது படக்குழு. இதனால் இணையத்தில் படக்குழுவினரைக் கடுமையாகத் திட்டத் தொடங்கினார்கள். துல்கர் சல்மான் இதற்கு மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து துல்கர் சல்மான் தனது ட்விட்டர் பதிவில் மன்னிப்பும் கோரியிருந்தார்.

துல்கர் சல்மான் வெளியிட்ட ட்வீட்டை மேற்கொளிட்டு நடிகர் பிரசன்னா, “ஆணியே புடுங்க வேணாம், என்ன கொடுமை சரவணா என்று நாம் பயன்படுத்தும் வசனங்களைப் போலத்தான் அவர்கள் ஊரில் இந்த வசனமும் பிரபலமானது.அந்தப் பெயருக்குப் பின்னால் இருக்கும் உணர்வுகள் என்ன என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் தவறான புரிதலின் அடிப்படையில் வெறுப்பைப் பரப்ப வேண்டாமே.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், துல்கர் சல்மான் வெளியிட்ட ட்வீட்டுக்கு பதிலாக “மலையாளப் படங்களைப் பார்த்திருக்கும் ஒரு தமிழனாக, அது எந்த அர்த்தத்தில் சொல்லப்பட்டது என்பது எனக்குப் புரிகிறது. தேவையில்லாத அவதூறுக்கும், தவறான புரிதலுக்கும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் துல்கர். ‘இந்த முகம் ஞாபகம் இருக்கிறதா’ (கமிஷ்னர் என்கிற பழைய மலையாளப் படத்தின் பிரபலமான வசனம்) என்று சுரேஷ் கோபி கேட்பது போலத்தான் இந்தப் பெயரும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது எனக்குத் தெரிகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார் பிரசன்னா. இதற்கு நன்றி தெரிவித்துள்ளார் துல்கர் சல்மான்.