டில்லி:

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்துக்கு பாஜ தலைவர் தருண் விஜய் திருவள்ளுவர் உருவப்படம் கொடுத்து வாழ்த்தினார். அவர் வெற்றி பெற்ற பிறகு முதல் பரிசாக திருவள்ளுவர் உருவப்படம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் பின் தருண் விஜய் கூறுகையில்,‘‘மக்கள் ஜனாதிபதி என்பதை ராம்நாத் கோவிந்த் நிரூபிப்பார். மத நல்லிணக்கத்தில் அம்பேத்கர் மற்றும் தீனதயாள் உபத்யாயா ஆகியோரது சிந்தனைகளை அவர் நிச்சயம் செயல்படுத்துவார். சமத்துவம் மற்றும் இணக்கத்திற்கு அவர் பணியாற்றுவார்.

ஜாதிகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க முன்னுதாரணமாக அவர் திகழ்வார் என்ற நம்பிக்கை உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஒரு வட இந்தியருக்கு தென் இந்தியாவை சேர்ந்த பெரும் தமிழ் ஞானி திருவள்ளுவர் உருவப்படம் பரிசாக வழங்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறையாகும்’’ என்றார்.

உத்தர்காண்டில் தலித் மக்களை ஒரு கோவிலுக்குள் அழைத்துச் செல்ல தருண்விஜய் முயற்சித்த போது கல்வீச்சு சிக்கி காயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.