விருதுநகர்: அதிமுக நிகழ்ச்சியில் பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,  அமெரிக்காவின் புதிய  அதிபராக இன்று பதவி ஏற்க உள்ள ஜோ பைடன்,  அதிமுகவின் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்கும் விதமாக  2 விரல்களை காட்டுகிறார் என்று கூறினார். அமைச்சரின் லூக் டாக், சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக்கூட்ட விழாவில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு பேசினார். அப்போது, திமுகவை கடுமையாக விமர்சித்ததுடன், கருணாநிதி உயிருடன் இருக்கும்போதே  அவரால் முதல்வராக ஆக முடியாதபோது அவர் மகனால் எப்படி முதல்வராக முடியும்? என்று கேள்வி எழுப்பியதுடன்,   மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் அடுத்த பொங்கலுக்கு ரூ. 5 ஆயிரம் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று கூறியவர், அடுத்த உலக அரசியல் குறித்து பேசத்தொடங்கி விட்டார்.

அமெரிக்காவில், டிரம்புக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜோ பைடன், தனது வெற்றியை விக்டரி என்று பொருள்படும் வகையில் 2 விரல்களை காட்டியதை, ஜோ பைடன், அதிமுகவின் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்கும் வகையில் இரட்டை இலையை காட்டினார் என்று ஒரே போடு போட்டார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இந்த பேச்சு அங்கு கூடியிருந்தவர்களிடையே நகைப்பை ஏற்படுத்தியது. அதிமுக தொண்டர்களே, அமைச்சரின் பேச்சை கடுமையாக கிண்டலடித்து  வந்தனர். இந்த நிலையில், அமைச்சரின் அதிரடி பேச்சு சமூக வலைதளங்களிலும் பரவிய நிலையில், நெட்டிசன்கள், அமைச்சரை கடுமையாக கலாய்த்து வருகின்றனர்.

பொதுவாக ஜோ பைடன் வெற்றியை உறுதிசெய்யும் நோக்கில், முஷ்டியை மடக்கி காண்பிப்பதுதான் வழக்கமானது. ஆனால், அமைச்சரோ, ஜோ பைடன் இரட்டை விரலை காட்டினார் என்று கூறியிருப்பது, இவரெல்லாம் தமிழகத்திற்கு அமைச்சராக இருப்பது தமிழர்களின் தலைவிதி என விமர்சிக்கப்படுகிறது.

அமெரிக்க அதிபராக, ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன், இன்று பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.