டில்லி:

னாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம்  ஜூலை மாதம் 24-ந்தேதி யுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய ஜூலை 17ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதைத் தொடர்ந்து ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (ஜூன் 14) தொடங்குகிறது

தேர்தல் நடத்தும் அதிகாரியாக பாராளுமன்ற செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்தந்த மாநில சட்டசபை செயலாளர்கள், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் சட்டசபை செயலாளர் (பொறுப்பு) க.பூபதி மற்றும் இணைச் செயலாளர் பி.பாலசுப்பிரமணியம் ஆகியோர் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறவர்கள் டெபாசிட் தொகை ரூ.15 ஆயிரமாகும். பதிவாகும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு பெறுவோர் மட்டுமே டெபாசிட்டை திரும்பப் பெற முடியும்.

தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், டெல்லி மேல்சபை உறுப்பினர்கள் ஆகியோர் வாக்களிக்கலாம். இவர்கள் வாக்களிப்பதற்கு சட்டசபை அருகே தனி இடம் ஒதுக்கப்படும். வாக்குச்சீட்டின் மூலம்தான் வாக்களிக்க முடியும். எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷின் இங்கு செல்லுபடியாகாது.
எம்.பி.க்களுக்கான வாக்குச்சீட்டின் நிறம் பச்சையாகவும், எம்.எல்.ஏ.க்களுக்கான வாக்குச்சீட்டின் நிறம் ‘பிங்க்’ ஆகவும் இருக்கும்.

வாக்கு செலுத்தும்போது உதவி தேவைப்பட்டால் அவர்களுடன் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி மட்டுமே செல்ல முடியும். வேறு யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

வாக்குச் சீட்டில், போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் அச்சிடப்பட்டு இருக்கும். அதில் முதல் ஓட்டு யாருக்கு என்பதை குறிக்கும் வகையில், அவரின் பெயருக்கு அருகே ஒன்று என்று எண்ணால் எழுத வேண்டும். டிக் செய்யக் கூடாது.

இரண்டாவது ஓட்டு போட வேண்டுமானால் வேட்பாளர் பெயர் அருகே இரண்டு என்று எண்ணால் எழுத வேண்டும். உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி கொடுக்கும் பேனாவையே இதற்கு பயன்படுத்த வேண்டும்.

35 வயது நிறைவு பெற்ற இந்தியர் யார் வேண்டுமானாலும்  ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடலாம்.

போட்டியிடுபவரின் வேட்புமனுவை, ஓட்டளிக்க தகுதியுடைய 50 பேர் (எம்.பி.க்கள் அல்லது எம்.எல்.ஏ.க்கள்) முன்மொழியவும், வேறு 50 பேர் வழிமொழியவும் வேண்டும்.

இன்று காலை 11 மணியில் இருந்து பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் வருகிற 28-ந் தேதியாகும்.

ஜனாதிபதி தேர்தலில் பாரதியஜனதா சார்பாக வேட்பாளர் அறிவிப்பு 15ந்தேதிக்கு பிறகு அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. அதேபோல், எதிர்க்கட்சிகள் சார்பாக வேட்பாளரும் விரைவில் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.