டில்லி,

னாதிபதி தேர்தலை தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஐந்தாண்டு பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய ஜூலை 2-வது வாரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.

வர இருக்கும்  ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ., கூட்டணியின் வேட்பாளருக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.  இதற்காக பா.ஜ.,வுக்கு எதிராக பல்வேறு மாநில கட்சிகளை இணைத்து, புதிய அணியை உருவாக்க காங்., முயற்சி மேற்கொண்டு வருகிறது.

ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் குறித்த ஆலோசிப்பதற்காக காங்., தலைவர் சோனியா தலைமையில் நாளை(மே 26) முக்கிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக அகிலஇந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், லல்லுபிரசாத் யாதவ், மம்தா பானர்ஜி போன்றோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதை தொடர்ந்து மேற்கு வங்க மாநில முதல்வர்,  மம்தாவும் எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை தொடங்கி உள்ளார்.

இந்நிலையில் நாளை எதிர்க்கட்சி தலைவர்களுக்குஅகில இந்திய காங்கிரஸ் தலைவர்   சோனியா காந்தி விருந்து அளிக்க உள்ளார்.

இந்த விருந்தில் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் சீதாராம் யெச்சூரி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என தெரிகிறது.

பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு அழைப்பு அனுப்பப்பட்ட போதிலும், அவர் கலந்து கொள்ள போவதில்லை என தெரிவித்துள்ளார்.

இந்த விருந்தை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் சார்பாக பலம் வாய்ந்த வேட்பாளர் ஒருவர்  நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.