வாஷிங்டன்:

அரசுப் பணிகளுக்கு தனியார் சொகுசு விமானங்களை பயன்படுத்திய விவகாரத்தில் அமெரிக்க சுகாதார செயலர் டாம் பிரைஸ் ராஜினாமா செய்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தில் சுகாதாரத்துறை செயலராக பணியாற்றி வந்த டாம் பிரைஸ் அரசு பணி நிமித்தமாக பல்வேறு இடங்களுக்கு செல்லும் போது அதிக கட்டணம் கொண்ட தனியார் விமானங்களை பயன்படுத்தியதாக குற்றாச்சாட்டு எழுந்தது.

தேசிய பாதுகாப்பு பணியில் தொடர்பில்லாத அரசுப் பணிகளுக்கு செல்லும் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் வணிக விமானங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விதி உள்ளது. டாம் பிரைஸ் 26 முறை தனியார் விமானங்களை பயன்படுத்தியதாக கூறப்பட்டது.

இந்த விவகாரத்தை கொண்டு எதிர்கட்சிகள் மற்றும் ஊடகங்கள் கேள்வி எழுப்பின. இதையடுத்து அவர் கடந்த மே மாதம் மன்னிப்பு கோரினார். தற்போது திடீரென அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை அதிபர் டிரம்ப் ஏற்றுக்கொண்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

காலியாக உள்ள சுகாதார செயலர் பதவிக்கு சீமா வர்மா மற்றும் பாபி ஜிண்டால் ஆகிய இந்திய வம்சாவளியினரின் பெயர்களை டிரம்ப் தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.