இருமுடியின் தத்துவம்

சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் இருமுடி தாங்கி செல்வது வழக்கமாகும்.   ஐயனின் 18 படிகளில் ஏற இருமுடி தாங்கி வரும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.   அத்தகைய இருமுடியின் மகத்துவம் குறித்து இந்த பதிவில் காண்போம்.

அனைத்து ஐயப்ப பக்தர்களும் தனது தலையில் தாங்கி நிற்கும் இருமுடியின் தத்துவத்தைத் தெரிந்து கொள்வது அவசியம் ஆகும். பூவுலகில் மணிகண்டன் என்ற நாமத்துடன் ஐயப்பசாமி ராஜசேகர மன்னன் மகனாக வாழ்ந்த போது புலிப்பால் கொண்டு வரக் காட்டுக்குச் சென்றார்.

அவ்வாறு செல்லும்போது குலதெய்வமாகிய சிவபெருமானைத் துணைக்கு அழைப்பது போல் 3 கண்ணுடைய தேங்காயை எடுத்துக்கொண்டு போகும்படி மணிகண்டனுக்கு மன்னன் ஆலோசனை சொன்னார். அதன்படி அவரும் எடுத்துச் சென்றார்..

மணிகண்டனின் அதே பழக்கத்தைத்தான் இப்போது சபரிமலை யாத்திரை செல்பவர்கள் இருமுடி சுமந்து செல்வதன் மூலம் கடைப்பிடித்து வருகிறார்கள். இந்த இருமுடியில் ஒருபுறம் பக்தனுக்குத் தேவையான பொருட்கள் மற்றொரு புறத்தில் யாத்திரைக்கான பொருட்களும் இடம் பெறும்.

ஐயப்ப பக்தன் யாத்திரை முடியும் போது தனக்கென்று கொண்டு போன பொருட்களை எல்லாம் காலி செய்து விடுகிறான்.   அதன் பிறகு அவனிடம் இறைவனுக்கான பொருட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது.  பதினெட்டு படிகளில் ஏறும் போது அவனிடம் தனக்கென ஒரு பொருளும் இருக்காது.

அதாவது ஆண்டவனை நெருங்கும் வரை தான் தனக்கென்று தேவைப்படுகிறது எனவும் அவரை நெருங்கியவுடன் நமக்கென்று ஒன்றும் தேவை இல்லை எல்லாம் அவனுக்கே அர்ப்பணம் ஆகிவிடுகிறது என்பது தான் இருமுடியின் தத்துவம் ஆகும்.
சுவாமியே சரணம் ஐயப்பா.