டில்லி,

காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ராகுல்காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து டுவிட் செய்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக வரும் 16ந்தேதி பொறுப்பேற்கவுள்ள ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. அதையடுத்து, அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி கடந்த வாரம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ராகுல் காந்தி தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டதற்கான சான்றிதழ் வரும் 16-ந் தேதி, தற்போதைய தலைவர் சோனியாகாந்தி மற்றும் முன்னணி தலைவர்கள் முன்னிலையில் வழங்கப்படும் என தெரிகிறது.

அதைத்தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்பார் எனவும், அப்போது சோனியா காந்தி கட்சி பொறுப்புகளை ராகுல்காந்தியிடம் அதிகாரபூர்வமாக ஒப்படைப்பார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக விரைவில் பொறுப்பேற்கவுள்ள ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பதவில், , ’காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரு ராகுல் காந்தியின் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.