டில்லி:

காஷ்மீர் விவகாரத்தில் வேறுநாடு தலையிட அனுமதிப்பதில்லை என்று ஜி-7 மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்பிடம், பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.

பிரான்சில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி, அங்கு அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார். அப்போது, இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்சினையில் வெளிநாடுகள் தலையிடுவதை விரும்பவில்லை, காஷ்மீர் விவகாரத்தை இந்தியா, பாகிஸ்தானே பேசி தீர்த்துக்கொள்ளும் என்று தெரிவித்தார்.

ஜி-7 மாநாடு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இன்று நடைபெறுகிறது. இதில்,  இந்தியா உறுப்பினராக இல்லாத நிலையில், இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தனிபட்ட முறையில் அழைப்பு விடுத்து இருந்தார். அதை ஏற்று,  பிரதமர் மோடி பக்ரைன்  பயணத்தை முடித்துவிட்டு பாரிஸ் சென்றார்.

ஏற்கனவே காஷ்மீர் விவகாரத்தில், தான் தலையிட்டு தீர்வு காண விரும்புவதாக டிரம்ப்  மீண்டும் மீண்டும் கூறி வந்த நிலையில், 3-வது நாடு தலையிட இந்தியா விரும்பவில்லை என்று மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று பிரதமர் மோடி டிரம்பை சந்தித்தார்.

அப்போது, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அனைத்து பிரச்சினைகளும் இருதரப்பு இயல்புடையவை, அதனால்தான் அவை குறித்து பேசவோ, அதில் தலையிடவோ,  வேறு எந்த நாட்டையும் நாங்கள்அனுமதிப்பது இல்லை என்று கறாராக கூறினார்.

இது தொடர்பாக இரு நாடுகளும் பேசி தீர்த்துக்கொள்ளும் என்றவர், காஷ்மீரில் நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும் டிரம்பிடம் மோடி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும், 1947 க்கு முன்னர் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக இருந்தன, அதனால், எங்கள் பிரச்சினைகளை விவாதித்து  தீர்க்க முடியும் என்று நான் நம்புகிறேன் என்றும் டிரம்பிடம் மோடி தெரிவித்து உள்ளார்.