டெல்லி:  நாடு முழுவதும் இன்றுமுதல் 60வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ள நிலையில், அந்த  பட்டியலில் இடம்பெற்றுள்ள பிரதமர் மோடி, இன்று டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

நாடு முழுவதும் இன்றுமுதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், நாள்பட்ட நோய்களுடன் இருக்கும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம்  தொடங்கி உள்ளது. அதன்படி, அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும்,  தனியார் மருத்துவமனைகளில் 250 ரூபாய் கொடுத்தும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  முதியோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பிரதமர் மோடி, கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸ் கோவாக்சின் தடுப்பூசியை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செலுத்திக்கொண்டார். மேலும், தகுதியான அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார்.