லண்டன்: இங்கிலாந்து இளவரசர் பிலிப்புக்கு இங்கிலாந்து நேரப்படி இன்று (17ந்தேதி சனிக்கிழமை) இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. இதில், பங்கேற்க  30 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து ராணி 2 ஆம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப், தனது 99 வயதில், கடந்த 9 ஆம் தேதி காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று வின்ஸ்டர் கேஸ்டிலில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நடைபெறுகிறது.

இறுதிச் சடங்குகள்  சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும், அதற்கு முன்னதாக நாடு முழுவதும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இறுதி  ஊர்வலத்திற்கு  இளவரசர் சார்லஸ், இளவரசி அன்னே, இளவரசர் வில்லியம், இளவரசர் ஹாரி, இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் இளவரசர் எட்வர்ட் ஆகியோர் தலைமை தாங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இங்கிலாந்தில், கொரோனா தொற்று மீண்டும் தீவிரமாக பரவி வருவதால் இறுதிச்சடங்கில் ராணி, உறவினர்கள் உள்பட 30 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ராணி 2 ஆம் எலிசபெத், அவரது மகனும் அடுத்த வாரிசுமான இளவரசர் சார்லஸ், அவரது 2 வது மனைவி கமீலா, சார்லசின் மூத்த மகன் வில்லியம்ஸ், அவரது மனைவி கேத் மற்றும் அவர்களின் 3 குழந்தைகள் இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, வில்லியம்சின் சகோதரர் ஹாரியின் மனைவி மேகன் கர்ப்பமாக இருப்பதால் அமெரிக்காவில் உள்ளார். எலிசபெத்–பிலிப்பின் ஒரே மகளான இளவரசி ஆன்னி, அவரது கணவர் மற்றும் 2 பிள்ளைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது