டில்லி:

திக அளவில் புழக்கத்தில் இருப்பதால், ரூ. 2,000 நோட்டுகளை அச்சிடுவது மற்றும் வெளியிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்தியுள்ளது.

கடந்த வருடம் நவம்பர் 8ம் தேதி திடீரென பிரதமர் மோடி, உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்தார். அதன்படி புழக்கத்தில் இருந்த, 500 – 1,000 ரூபாய் நோட்டுகள் வங்கி மூலம் திரும்பப் பெறப்பட்டன. அவற்றுக்குப் பதிலாக  புதிதாக, 500 – 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து, 200 ரூபாய் நோட்டும் புழக்கத்தில் விடப்பட்டது.

இந்த நிலையில், நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் குறித்து, ரிசர்வ் வங்கி சமீபத்தில், தனது ஆண்டு அறிக்கையில் கூறியிருந்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில், பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை பொருளாதார ஆலோசகர், சவுமியா காந்தி கோஷ் எழுதியுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:


“ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கையின்படி, இந்த வருடம் மார்ச் மாத நிலவரப்படி, 3.50 லட்சம் கோடி ரூபாய்க்கு, குறைந்த மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளும், 13.32 லட்சம் கோடி ரூபாய்க்கு, உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் உள்ளன. பாராளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சகம் தாக்கல் செய்த அறிக்கையின்படி, ரிசர்வ் வங்கி, 15.78 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளையும் அச்சிட்டுள்ளது.

அச்சிடப்பட்ட நோட்டுகள் மற்றும் புழக்கத்தில் உள்ள நோட்டுகளுடன் ஒப்பிடுகையில், 2.46 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள உயர் மதிப்பு நோட்டுகள் புழக்கத்துக்கு வரவில்லை. ரிசர்வ் வங்கி, 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியுள்ளது. மேலும், கையில் உள்ள அச்சிடப்பட்ட நோட்டுகளையும் புழக்கத்தில் விடவில்லை” –  இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.