புதுடெல்லி: திகார் சிறையில் தனது சக கைதியை குத்தி கொலை செய்துள்ளார் இன்னொரு கைதி. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் தனது தங்கை கற்பழிக்கப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் இந்தக் கொலை சம்பவம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

சிறை எண் 8/9 இல், 21 வயதான ஜாகிர், 27 வயதான முகமது மெஹ்தாபை குத்தினார். ஜூன் 29ம் தேதி, காலை 6 மணிக்கு, கூரிய பொருளின் மூலம், முகமதுவின் வயிறு மற்றும் கழுத்தில் பலமுறை குத்தியுள்ளார் ஜாகிர்.

முகமது மெஹ்தாப், டெல்லி நிஜாமுதீன் பகுதியில் வசித்தவர். ஜாகிர், ‍டெல்லியின் தக்சின்புரியில் வசித்தவர். சமீபத்தில்தான், சிறை எண் 5 இலிருந்து 8க்கு மாற்றப்பட்டார் ஜாகிர்.

சம்பவம் நடைபெற்றவுடன், முகமதுவிற்கு சிறையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் தீன்தயாள் உபாத்யாயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு வரும்போதே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.