ஜெயிலுக்குள் போலீசாரை அடித்து உதைத்த கைதிகள்..

சாத்தான்குளத்தில் ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் –இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ்,,ஏட்டு முருகன், போலீஸ்காரர் முத்துராஜ் ஆகிய ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் உள்ள பேரூரணி மத்தியச் சிறையில்  5 பேரும் அடைக்கப்பட்டிருந்தனர்.

நேற்று  மாலை 5 போலீசாரும் தாங்கள் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கு முன்பு நின்று கொண்டு ஆலோசனை நடத்தியுள்ளனர்.

5 போலீசாரும், தந்தை –மகனை கொலை செய்தவர்கள் என்ற தகவல் அங்குள்ள கைதிகளுக்குத் தெரிய வந்துள்ளது. இதையடுத்து 30 சிறைக்கைதிகள் ஒன்று திரண்டு, 5 போலீசாரையும் சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்.

இதனால் சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கைதிகளால் தாக்கப்பட்ட 5 போலீசாரையும் , சிறைக்காவலர்கள் மீட்டனர். பாதுகாப்பாக அவர்களை சிறையில் உள்ள அறைக்கு அழைத்துச் சென்றனர்.

தூத்துக்குடி சிறையில் 5 போலீசாரையும் வைத்திருப்பது பாதுகாப்பாக இருக்காது என்பதால், அவர்கள் 5 பேரையும் உடனடியாக மதுரைக்குக் கொண்டு சென்று அங்குள்ள மத்தியச் சிறையில் அடைத்தனர்.

வியாபாரிகள் கொலை வழக்கில் கைதான, போலீசார் , சிறை வளாகத்தில் , கைதிகளால் தாக்கப்பட்ட சம்பவம்  பரபரப்பை உருவாக்கியுள்ளது.

-பா.பாரதி.