காலாவதியாகும் ‘விசா’..  கலங்கும் பிரித்வி ராஜ் டீம்..

’அது ஜீவிதம்’’ என்ற மலையாள திரைப்படத்தை பிளெஸ்சி இயக்க, பிரித்விராஜ் நாயகனாக நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புக்குக் கடந்த மாதம் பிரித்விராஜ் உள்ளிட்ட 58 பேர் ஜோர்டான்  நாட்டுக்குச் சென்றனர்.

சில நாள் ஷுட்டிங் நடந்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா காரணமாக, உலகம் முழுவதும் உள்ள பெரும் பாலான நாடுகள்  ஊரடங்கை அமல் படுத்தியுள்ளன.

அதில் ஜோர்டானும் அடக்கம்.

ஜோர்டனில் நடந்த ‘அது ஜீவிதம்’ படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது.

படப்பிடிப்பு குழுவினர் கேரள முதல் –அமைச்சர் பினராயி விஜயன் மற்றும் மத்திய வெளியுறவு அமைச்சர் முரளிதரன் ஆகியோரிடம் முறையிட்டனர்.

அவர்கள் வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, ஜோர்டானில் சில நாட்கள் மீண்டும் படப்பிடிப்பு நடத்த அந்த நாடு அனுமதி அளித்தது.

உணவு, இருப்பிடம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் ஜோர்டான் அரசால் செய்யப்பட்டன.
இந்த நிலையில் படப்பிடிப்பை ரத்து செய்யுமாறு அந்த நாட்டு அதிகாரிகள் கேட்டுக்கொண்டதால் 4 நாட்களுக்கு முன்பு ’ஷுட்டிங்’ நிறுத்தப்பட்டது.

இப்போது படக்குழுவினர், அங்குப் பாலைவனத்தில் உள்ள முகாமில் தங்கியுள்ளனர்.

அவர்கள் ’விசா’ வரும் 8 ஆம் தேதியுடன் முடிகிறது.

விமான போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால், படக்குழுவினர் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அவர்கள், விசா காலத்தை நீடிக்க, மத்திய அமைச்சர் முரளிதரன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

அங்குத் தனிமைப் படுத்தப்பட்டுள்ள படக்குழுவினருக்கு 72 மணி நேரத்துக்கு ஒரு முறை டாக்டர்கள் குழு, பரிசோதனை நடத்தி வருகிறது.