என் மகனுக்காகத் தனி விமானம் தேவையில்லை… முன்னணி நடிகரின் தாயார் உருக்கம்     பாலைவனத்தில் தவிக்கும்  படக்குழு நிலை என்ன?

* * *

உலகளாவிய ஊரடங்கு காரணமாக ஜோர்டான் பாலைவனத்தில் தவித்து நிற்கிறது, மலையாள படக்குழு.

‘ஆடுஜீவிதம்’ என்ற படத்தின் படப்பிடிப்புக்கு, அங்குச் சென்ற குழுவினர், ஊரடங்கு காரணமாகப் படப்பிடிப்பை நிறுத்தி விட்டனர்.

அவர்கள் விசா வரும் 8 ஆம் தேதி முடிகிறது

அங்கிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், படத்தின் இயக்குநர் பிளெஸ்ஸி, மத்திய- மாநில அரசுகளிடம்  உதவி கோரியுள்ளார்.

படத்தின் ஹீரோ பிரித்விராஜுடன் அவரது தாயாரும், நடிகையுமான மல்லிகா போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர் ’படக்குழுவினர் நலமாக உள்ளனர்’ என்று கூறினார்.

‘’ படக்குழுவினருக்கு  எந்த பிரச்சினையும் இல்லை. அவர்களை அழைத்து வர தனி விமான வசதியை நாங்கள் கேட்கப்போவதில்லை.

உலகம் முழுக்க எத்தனையோ மாணவர்கள் உள்ளிட்டோர் – நடு வழியில் சிக்கியுள்ளனர்.இந்த நிலையில் படக்குழுவுக்குச் சலுகை காட்டக் கோருவது சரியாக இருக்காது.

மத்திய அமைச்சர் முரளிதரன் , எங்களுடன் பேசினார். படக்குழுவின் பாதுகாப்புக்கு முடிந்த வரை உதவுவதாக உறுதி அளித்தார். விசாவை நீடித்தால் போதும்’’ என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார், மல்லிகா.

இந்த படம் குறித்து புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இதில் பிரித்விராஜுக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.

படத்தின் 30 % படப்பிடிப்பு கேரளாவில் முடிந்துள்ளது.

இந்த படத்துக்காக, பிரித்விராஜ், 30 கிலோ எடை குறைத்துள்ளார்

– ஏழுமலை வெங்கடேசன்