சென்னை:
னியார் கல்வி நிறுவனங்கள் கல்விக்கட்டணம் வசூலிப்பது தொடர்பான விசாரணையில், கல்வி நிறுவனங்கள் முழு கட்டணத்தை வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முழுக் கட்டணம் வசூலித்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை சமர்ப்பிக்கும்படியும்  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 24 முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக பொதுத்தேர்வு நடைபெற்று, கோடை விடுமுறை முடிந்து, ஜூன் மாதத்தில் புதிய கல்வியாண்டி தொடங்கி வகுப்புகள் தொடங்கப்படும்.
ஆனால், இந்த ஆண்டு கொரோனா தொற்றால் பள்ளிகள் இதுவரை திறக்கப்படவில்லை.  இதனால் பல தனியார் கல்லூரிகள் ஆன்லைன் மூலம் பாடம் போதிக்கத் தொடங்கியதால்,  கல்விக் கட்டணத்தை உடனே செலுத்த மாணாக்கர்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்,   40 சதவீத கட்டணத்தை உடனேவும், 35 சதவீத கட்டணத்தை பள்ளி திறந்தவுடன் கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.
வழக்கின் தொடர் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, சில பள்ளிகள் முழு கட்டணத்தையும் மாணவர்களிடம் இருந்து வசூலிப்பதாக, தமிழக அரசு சார்பாக அரசு வக்கீல் அன்னலட்சுமி, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு முறையிட்டார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவை மீறி இது போன்று பெற்றோர்களை நிர்பந்தப்படுத்தி முழு கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளின் பட்டியலை ஆகஸ்ட் 17ம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் எச்சரிக்கை விடுத்தார்.