புல்வாமா

காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் மரணம் அடைந்தோருக்கு பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீர் மாநிலத்தில் சி ஆர் பி எஃப் படையினர் மீது ஜெய்ஷ் ஈ முகமது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த தற்கொலைப் படையினர் திடீர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் 30க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளதாக அஞ்சப்படுகிறது.    இந்த கொடூர செயலால் நாடே பரபரப்பில் ஆழ்ந்துள்ளது.

பிரதமர் மோடி, “புல்வாமா பகுதியில் சிஅர்பிஎஃப் படையினர் மீது நடந்த தாக்குதல் வெறுக்கத்தக்கது. இந்த கொடூர தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். நமது துணிச்சலான வீரர்களின் தியாகம் வீணாகாது. வீர மரணமடைந்த இந்த படையினரின் குடும்பத்துக்கு நாடெங்கும் உள்ள அனைவருமே தோள் கொடுக்க தயாராக உள்ளனர். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” என தமது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலராக பதவி ஏற்ற பிரியங்கா காந்தி தனது முதல் செய்தியாளர் இன்று தொடங்கிய நேரத்தில் இந்த செய்தி வந்தது. பிரியங்கா காந்தி இந்த செய்தியை அறிந்து பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளார். அவர் கூடியிருந்த செய்தியாளர்களிடம், “இந்த துக்க நிகழ்வு நேர்ந்துள்ள நேரத்தில் நாம் அரசியல் பேசுவது சரி அல்ல. நாம் இரு நிமிடங்கள் இறந்த வீரர்களுக்காக மவுன அஞ்சலி செலுத்துவோம்.” என தெரிவித்துள்ளார்.

இரு நிமிட மவுன அஞ்சலிக்கு பிறகு தாம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலராக தனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பை பிரியங்கா காந்தி ரத்து செய்துள்ளார்.