‘’உண்மையையும், பொறுமையையும் ராகுலிடம் கற்றேன்’’ –  பிரியங்கா பெருமிதம்..

சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ‘ரக்ஷா பந்தன்’ பண்டிகை வட இந்தியாவில் நேற்று கொண்டாடப்பட்டது.

சகோதரர்களாகக் கருதும் ஆண்களுக்கு  ’’ராக்கி கயிறு’ கட்டி பெண்கள் இந்த விழாவைக் கோலாகலமாகக்  கொண்டாடுவது வழக்கம்.

இந்த ஆண்டு கொரோனா தாக்கம் காரணமாக டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், ஒருவருக்கொருவர் அன்பைப் பகிர்ந்து கொண்டனர்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா  காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், தனது சகோதரர் ராகுல் காந்தியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

‘’அன்பு, உண்மை , பொறுமை ஆகிய மூன்றையும் எனது சகோதரர் ராகுலிடம் இருந்து நான் கற்றுக்கொண்டேன். ராகுலைப் போன்ற ஒருவர் எனக்குச்  சகோதரராக வாய்க்கப் பெற்றதற்காக நான் பெருமிதம் கொள்கிறேன்.’’ என்று பிரியங்கா  தெரிவித்துள்ளார்.

இதுபோல் ராகுல் காந்தியும் , பிரியங்காவுடன் தான் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை டிவிட்டரில்  வெளியிட்டு, அனைவருக்கும் ‘ரக்ஷா பந்தன்’’ வாழ்த்துக்களைக் கூறியுள்ளார்.

-பா.பாரதி.