புதுடெல்லி: இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதில் மத்திய பாரதீய ஜனதா அரசு நம்பிக்கைக் கொண்டுள்ளதா? என கேள்வியெழுப்பியுள்ளார் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி.

ஜம்மு காஷ்மீரில் மாநில காங்கிரஸ் தலைவர் குலாம் அகமது மீர் மற்றும் மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரவீந்தர் ஷர்மா ஆகியோர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர்களும் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகளை கண்டித்தே பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டின் இதர தலைவர்களைப் போலவே அரசியல் சாசனத்திற்கு கட்டுபட்ட முன்னாள் முதல்வர்களை வீட்டுச் சிறையில் வைத்திருப்பதற்கு அவர் கடும் எதிர்ப்பை பதிவுசெய்துள்ளார்.

மூத்த காங்கிரஸ் தலைவர்களான தாரா சந்த், மதன்லால் ஷர்மா, முலா ராம், ஜுகல் கிஷோர், யோகேஷ் சானே, மனோகர் லால் ஷர்மா ஆகியோர், மாநில காங்கிரஸ் தலைவர் குலாம் அகமது மீரை வீட்டுச் சிறையில் வைத்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.