புதுடெல்லி:
சோனியா காந்தியின் மகளும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான பிரியங்கா காந்தி அரசு பங்களாவை காலி செய்யும்படி வீட்டுவசதி வாரிய மற்றும் நகர விவகார அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி. இவருக்கு டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள 35-வது நம்பர் பங்களாவை அரசு ஒதுக்கியிருந்தது. கடந்த 1997-ம் ஆண்டு பாதுகாப்பு காரணத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்னும் ஒரு மாதத்திற்குள் அரசு வீட்டை காலி செய்யும்படி வீட்டு வசதி வாரியம் மற்றும் நகர விவகார அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்த நோட்டீஸில் ‘‘உள்துறை விவகார அமைச்சகம் தங்களுக்கு வழங்கிய சிறப்பு பாதுகாப்பு குழுவின் பாதுகாப்பை விலக்கிக் கொண்டுள்ளது. Z+ பாதுகாப்பை வழங்கியுள்ளது. சிறப்பு பாதுகாப்பு குழுவின் பாதுகாப்பு இல்லாத நபர்களுக்கு இந்த இடத்தில் வீடு வழங்க இயலாது.

இதன் காரணமாக தங்களுக்கு அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட வீட்டிற்கான சலுகை ரத்து செய்யப்படுகிறது. இதனால் இன்றிலிருந்து இன்னும் ஒரு மாதம் காலஅவகாசம் கொடுக்கப்படுகிறது.

அதற்குப் பிறகு வீட்டை காலி செய்யவில்லை என்றால், விதிமுறைப்படி சேதாரம்/அபராத வாடகை வசூலிக்கப்படும்’’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.