சபரிமலை சென்று 18 படி ஏறுவோருக்கான 18 நடைமுறைகள்

சபரிமலை சென்று 18 படி ஏறுவோருக்கான 18 நடைமுறைகள் பற்றி இங்கு காண்போம்.

ஆண்டு தோறும் மண்டல பூஜை வேளையில் சபரிமலை செல்ல விரதம் இருந்து 18 படி ஏறி ஐயனை தரிசிக்கும் பக்தர்கள் ஏராளமானோர் உள்ளனர்.  அதிலும் குறிப்பாகக் கன்னி சாமி என அழைக்கப்படும் முதல் முறை செல்வோர் மிகவும் அதிகமாக உள்ளனர்.  18 படி ஏற உள்ள அவர்களுக்கான 18 நடைமுறைகள்இதோ

1. ஐயப்ப விரதத்தில், மூட நம்பிக்கைகள் அவசியமில்லாதவை.

2. ஐயப்ப பூஜை என்ற பெயரில், ஒலிபெருக்கி வைத்து நள்ளிரவு வரை அடுத்தவர்களுக்கு இடையூறாக இருப்பது விரும்பத்தக்கதல்ல!

3. தங்களுக்கு இது எத்தனையாவது மலை என்று வினவுவதும், தான் இத்தனை தடவை மலைக்குச் சென்றிருக்கிறேன் என்று பெருமை அடித்துக்கொள்ள வேண்டாம்.

4. மாலை போடுதல், இருமுடி கட்டுதல் மிகவும் புனிதமான வைபவம் ஆகும். இதை வீடியோ, புகைப்படம் எடுப்பது உகந்த செயல்கள் அல்ல. இதை அவசியம் தவிர்க்க வேண்டும்.

5. இருமுடி கட்டும் நாளை ஒரு விழாவாக எண்ணி, உற்றார் உறவினர்களுக்கு அழைப்பு அனுப்பி அவர்களிடம் அன்பளிப்பாகப் பணம் பெறுதலும் ஐயப்ப பக்தி விதிமுறைக்குப் புறம்பானது. பக்தர்கள் காணிக்கையாகக் கொடுக்கும் பொருள்களை சன்னிதான உண்டியலில் அப்படியே சேர்ப்பதுதான் முறை.

6. இருமுடி தாங்குபவர்களுக்குப் பூமாலை அணிவித்து, அடுத்த நிமிடமே அந்தப் பூக்கள் மற்றவர்கள் காலில் பட்டுச் சீரழிவது விரும்பத்தக்கச் செயல் அல்ல.

7. சபரிமலை யாத்திரையின்போது, கன்னி சாமிகள்தான் எல்லா வேலைகளையும் செய்யவேண்டும் என்று நிர்ப்பந்திப்பது தவறானது. பக்தியும் பணிவும் எல்லோருக்கும் பொதுவானது.

8. ஐயப்ப பக்தர்கள் வெளி ஸ்தலங்களுக்கு வழிபடச் செல்லும்போது, அங்குள்ள நடைமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் மதித்து நடத்தலும் அவசியமானது. உதாரணத்துக்குச் சொல்லவேண்டுமெனில், குருவாயூரப்பன் சன்னதியில் மிக சப்தமாக சரண கோஷம் சொல்லாமல், அமைதியாக வழிபடுதல்.

9. சபரிமலை யாத்திரை செல்லும் ஒவ்வொரு பக்தரும், ஒரு ஐந்து நிமிடமாவது பம்பை நதிக்கரையையோ அல்லது சன்னிதானத்தையோ சுத்தம் செய்வது மிகவும் போற்றத்தக்க செயலாகும்.

10. சபரிமலை யாத்திரையின்போது மிகவும் ஆடம்பரமான விருந்து உண்ணுதலைத் தவிர்த்தல் எல்லா வகையிலும் நல்லது.

11. சாப்பிட்ட இலைகளை, புனிதமான பம்பை நதியில் எறிந்து அந்தப் புண்ணிய நதியை அசுத்தப்படுத்துதல் மிகவும் தவறான செயலாகும். மாறாக, ஒரு குழி தோண்டி அவற்றைப் புதைக்கலாம்.

12. பம்பையில் விளக்கேற்றி வழிபடுதலை, மற்றவர்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல், அமைதியாக, ஆடம்பரமின்றி தங்கும் தாவளத்திலேயே (இடத்திலேயே) கொண்டாடுதல் மிகச் சிறப்பான செயல்.

13. சன்னிதானத்தில், கற்பூர ஆழிப் பிரதட்சிணத்தை எந்தவித அசம்பாவிதத்துக்கும் உட்படுத்தாமல் அடக்கமாகச் செய்வது எல்லோருக்கும் நல்லது.

14. கண்ணாடி பாட்டில்களையும் உடைந்த தேங்காய் மூடிகளையும் கண்ட இடத்திலும் போட்டு, மற்ற ஐயப்பன்மார்களின் பாதத்தைப் புண்ணாக்கும் பாவத்தைச் செய்ய வேண்டாம்.

15. ஐயப்பன் வழிபாட்டை, ஆவேசத்துக்கும் ஆக்ரோஷத்துக்கும் ஆடம்பரத்துக்கும் உட்படுத்தாமல், அமைதியாகவும் சாத்விகமாகவும் மேற்கொண்டால் அனைவருக்கும் நன்மையே.

16. மாலைக்கு மதிப்பளித்து ஒரு மண்டலக் காலம் விரத முறைகளை நெறியாகவும் முறையாகவும் கடைப்பிடித்து, தான் என்னும் அகங்காரத்தை விட்டொழித்து, இறைவனிடம் முழு நம்பிக்கை வைத்து, முழு சரணாகதி அடைந்து, ஒருமுகமாக வழிபட்டால், இறைவனின் அருட்கடாட்சம் குறைவில்லாமல் கிடைக்கும்.

17. தற்போது பிளாஸ்டிக் பல இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.   எனவே பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதைக் குறிப்பாக சபரிமலையில் பயன்படுத்துவதை அறவே தவிர்க்கவும்.

18.  கூட்டமாக செல்பவர்கள் அவரவர் குழுக்களை விட்டு விலகாமல் ஒன்றாகப் பயணிக்கவும்.

இவ்வாறு படிகள் ஏற ஏற, அவர்கள் தன் வாழ்வில் உயர்ந்துகொண்டே இருப்பார்கள் என்பதும் சத்தியம்!

சுவாமியே சரணம் ஐயப்பா!!