நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாக நடிகர் வடிவேலு சமீபத்தில் அறிவித்தார். ஆனால் அதற்கு பட அதிபர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ பட சர்ச்சையால் தொடர்ந்து நடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த படம் ஷங்கர் தயாரிக்க சிம்புதேவன் இயக்கத்தில் உருவானது. இந்த பட இயக்குனருடன் தகராறு ஏற்பட்டு நடிக்க மறுத்துவிட்டார் வடிவேலு . இதனால் ஷங்கர் நஷ்டஈடு கேட்டு தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்த புகாரின் பேரில் புதிய படங்களுக்கு வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய தடைவிதித்தனர்.

இந்த நிலையில் புதிய படத்தில் நடிக்க தயாராகி உள்ளதாகவும் படம் பற்றிய அறிவிப்பை செப்டம்பர் மாதம் வெளியிடுவேன் என்றும் , இந்த படத்தை சுராஜ் இயக்க உள்ளதாகவும் வடிவேலு அறிவித்திருந்தார் .

ஆனால் தயாரிப்பாளர் சங்க ஆலோசனை குழுவை சேர்ந்த டி.சிவா செய்தியாளர்களிடம் பேசுகையில், “இயக்குனர் ஷங்கருக்கான இழப்பீடு தொகையை வடிவேலு வழங்கும் வரை எந்த தயாரிப்பாளரும் வடிவேலுவை வைத்து படம் எடுக்க முன்வர மாட்டார்கள்” என கூறியுள்ளார் .