கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனாவால் பலியாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நாள் ஒன்றுக்கு ஏறக்குறைய இந்தியாவில் சுமார் 4 லட்சம் நபர்களும், தமிழகத்தில் சுமார் 25 ஆயிரம் நபர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் .

அந்த வகையில், தற்போது தயாரிப்பாளர் கலைச்செல்வன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தார். சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான சாருஹாசன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் எண்ணற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக இவர் நடித்த திரைப்படம் தாதா87. விஜய் ஸ்ரீ இயக்கத்தில் வெளிவந்த தாதா87 திரைப்படத்தை கலை சினிமாஸ் கம்பெனி சார்பில் கலைச்செல்வன் தயாரித்திருந்தார். தொடர்ந்து கலை சினிமா சார்பில் நடிகர் மொட்டை ராஜேந்திரன் நடிப்பில் TIME UP திரைப்படமும் தயாரானது. கடந்த டிசம்பர் மாதம் இப்படத்தின் டீசர் வெளியானது.

தாதா 87 திரைப்படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் தயாரிப்பாளர் கலை செல்வனின் மரணம் குறித்து பகிர்ந்துள்ளார்.