இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலால் எந்தவொரு படப்பிடிப்புமே நடைபெறவில்லை. இதனால் திரையுலகினர் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனால் பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்கள்.அதன்படி ரஜினியும் பல்வேறு சங்கங்களுக்கு உதவி புரிந்து வருகிறார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் கே.ராஜன் ரஜினிக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். அதில் நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கும் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து ரஜினியும் 750 பேருக்கு உதவும் வகையில் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தார். இது மிகவும் சர்ச்சையாகியுள்ளது .
நாம் முதலாளிகள், பலரும் நம்மிடம் சம்பளம் வாங்குகிறார்கள். நாம் எப்படி இவ்வாறு வரிசையில் நின்று வாங்கலாம் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சுரேஷ், “எல்லோருக்கும் சம்பளம் கொடுத்த திரையுலக முதலாளிகள் தயாரிப்பாளர்கள். இன்று ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அரிசிப் பையை வாங்க கொளுத்தும் வெயிலில் வரிசையில் நிற்க வேண்டுமா? இதை வாங்கிக்கொண்டு வந்தால் எவ்வளவு கவுரவக் குறைச்சல். சின்ன பட்ஜெட் படம் எடுக்கவே ஒரு கோடி ரூபாய் செலவு செய்கிறோம். ஆயிரம் ரூபாய் அரிசிக்கு வெளியில் நிற்க வேண்டுமா?
தொழிலாளர்கள் அவர்கள் சங்கத்தினர் வழங்கிய அரிசியை வரிசையில் நின்று வாங்கி வந்துள்ளனர். அவர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் வேறுபாடு என்ன இருக்கும்? தயாரிப்பாளர்களுக்கு ரஜினி உதவ விரும்பினால், லாரன்ஸ் போல் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கலாம்” என்று தனது ஆடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.