சாத்தூர்:

மாணவிகளை தவறான பாதிக்கு திசைதிருப்ப முயன்று கைது செய்யப்பட்டுள்ள அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன்,  வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார்.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, தன்னிடம் பயிலும் மாணவிகள் நான்கு பேரிடம் பாலியல் தொழிலுக்கு ஆசை காட்டியதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பில் நிர்மலா தேவி மீது அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

போலீஸார் நிர்மலா தேவியை திங்கள்கிழமை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இன்று அவரை சாத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். அவரை 5 நாள் சிபிசிஐடி காவலுக்கு நீதிபதி அனுப்பி வைத்தார்.

இந்நிலையில், கோர்ட்டுக்கு வந்த நிர்மலாதேவிக்கு எதிராக பொதுமக்களும், சில வழக்கறிஞர்களும், மாதர் சங்கங்களும் போராட்டம் நடத்தின.

இந்நிலையில், நிர்மலாதேவிக்காக   நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் வழக்கிலிருந்து திடீரென விலகியுள்ளார்.

தனது  சொந்த விருப்பத்தின் பேரிலேயே வழக்கில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.