சென்னை: சட்ட விரோத கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சியின் 5வது மண்டலத்தில் உள்ள 5,574 சட்ட விரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் பற்றி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி  வழக்கறிஞர் ருக்மாங்கதன் என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மண்டல அதிகாரி ராம் பிரதீபன் ஆகியோர் காணொளி காட்சி மூலம் ஆஜராகினர். விதிமீறல் கட்டடங்களுக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து, 5வது மண்டலம் போன்று மற்ற மண்டலங்களில்  சட்ட விரோத கட்டுமானங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்வதாக அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட, வழக்கு விசாரணை பிப்ரவரி 5ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.