சென்னை:

ரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது என்று தமிழக தலைமை செயலாளர் கிரிஜா எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், நாளை திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடக்கும் என்று  ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

இன்று திருச்சியில் ஜாக்டோ-ஜியோவின் உயர்மட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  நடை பெற்றது. இந்த கூட்டத்தில்  மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், மீனாட்சி சுந்தரம், ஆறுமுகம் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில்,  ஏற்கனவே திட்டமிட்டப்படி நாளை 22-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ, ஜியோ  மாநில ஒருங்கிணைப்பாளர்கள்,

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகித முரண்பாடுகளை களைய வேண்டும்.

சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.

3 ஆயிரத்து 500 தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவையும் 3 ஆயிரத்து 500 சத்துணவு மையங்களை மூடும் முடிவையும் ரத்து செய்ய வேண்டும்

உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர்ந்து போராடி வருகிறது. ஆனால், அரசு தங்களது கோரிக்கை குறித்து  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே அரசின் போக்கை  கண்டித்தும் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் நாளை 22-ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

நாளை காலை 10 மணிக்கு மாநிலத்தின் அனைத்து தாலுகாக்களிலும் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டமும், 23, 24-ந்தேதிகளில் தாலுகா தலை நகரங்களில் சாலை மறியல் போராட்டமும் 25-ந்தேதி மாவட்ட தலை நகரங்களில் வேலை நிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டமும் நடத்தப்படும் என்றும் கூறினார்.

பின்னர், ஜனவரி 26-ந்தேதி சென்னையில் ஜாக்டோ -ஜியோவின் மாநில உயர்மட்டக்குழு கூட்டம் கூடி அடுத்த கட்ட பேராட்டம் குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளனர்.

இதற்கிடையே போராட்டத்தை தடுக்க எந்த வித இடையூறு வந்தாலும் கே.ஜி. வகுப்புகளுக்கு பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பணிமாற்றம் தொடர்பான ஆணை களை பெறவோ? பணியில் சேரவோ வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்து உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.