சென்னை,

மிழகத்தில் புதியதாக 70  மணல் குவாரிகளை திறப்பதை கைவிடாவிட்டால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுடன் போராட்டத்தில் திமுக ஈடுபடும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

தமிழகத்தில் நிலவிவரும் மணல் தட்டுப்பாட்டை நீக்கம் நோக்கில், மேலும் 70 மணல் குவாரிகள் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அரசியல் கட்சியினர் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அரசு புதியதாக மணல் குவாரிகள் திறந்தால், திமுக மக்களை திரட்டி போராட்டம் நடத்தும் என்று திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தின் எட்டு மாவட்டங்களில் 70 மணல் குவாரிகளைப் புதிதாய் திறக்க ‘குதிரை பேர’ அ.தி.மு.க. அரசு முடிவு செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே கிராவல் மண் காண்டிராக்ட் ரகசியமாக விடப்பட்டு, அத்துமீறி ஆங்காங்கே கிராவல் மண்ணை அள்ளி அரசுக்குப் பெருத்த நட்டத்தை ஏற்படுத்தி வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது.

மாநிலத்தில் உள்ள முக்கிய பகுதிகளான காவிரி டெல்டா, தாமிரபரணி, பாலாறு உள்ளிட்ட இயற்கை வளங்களை எல்லாம் விதிகளுக்கு மாறாக சூறையாடிய அ.தி.மு.க. அரசின் மணல் கொள்ளை பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தற்போது பொதுப்பணித்துறையை தன்வசம் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் தங்கு தடையின்றி மணல் கொள்ளை ஏகபோகமாக நடைபெற்று, சேகர்ரெட்டி என்ற ‘மணல் மாஃபியா’ உருவான கதை இன்றைக்கு சி.பி.ஐ. வரை சென்றிருக்கிறது.

தமிழகம் முழுவதும் இருந்த 35-க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் மூலம் இயற்கை வளங்களை ‘மணல் மாபியாக்கள்’ சூறையாடி, நிலத்தடி நீருக்குக் கேடு விளைவித்து வருவதை எதிர்த்து விவசாயிகளும், கிராம மக்களும் சளிக்காமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பல்வேறு இடங்களில் உள்ள குவாரிகளில் பொதுப்பணித்துறையின் விதிமுறைகளுக்கு மாறாக மணல் படுபாதாளம் வரை தோண்டியெடுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், மணல் குவாரிகளுக்கு நீதிமன்றங்களும் தடை விதித்துள்ளன. மணல் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து ‘ராஜேஷ் லக்கானி கமிட்டி’ ஒரு விசாரணை அறிக்கையே கொடுத்து, அதுவும் கிடப்பில் போடப்பட்டது.

அதுமட்டுமின்றி, மணலுக்கு மாற்றாக செயற்கை மணல் தயாரிக்க விண்ணப்பித்த கம்பெனிகளுக்கு அனுமதி வழங்குவதில் ‘குதிரை பேர’ அரசு தாமதம் செய்தது ஏன்? தமிழகத்தில் உள்ள இயற்கை வளங்கள் பறிபோவதைத் தடுக்கும் வகையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணல் விற்பனையை அனுமதிக்க ‘குதிரை பேர’ அரசு மறுப்பது ஏன்? என்ற கேள்விகளுக்கும் எந்த பதிலும் இல்லை.

தமிழகத்தைச் சிறிது சிறிதாகப் பாலைவனமாக்க முயற்சிக்கும் இந்த அறிவிப்பு, விவசாயத்திற்கான நீர் ஆதாரங்களை முழுவதும் சீர்குலைத்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. அதிலும் குறிப்பாக கட்டுமானத் தொழில்களை முடக்கும் விதத்தில் மணல் தட்டுப்பாட்டை செயற்கையாக உருவாக்கிய குதிரை பேர அரசு ‘கிராவல் மண்’ எடுக்க அனுமதி வழங்கிய கையோடு, 70 மணல் குவாரிகளை திறக்கும் முடிவை எடுத்திருப்பது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

சேகர் ரெட்டி போல் மணல் மாபியாக்கள் ஆதிக்கம் செலுத்தவும், மாமூல் ராஜ்யம் தங்குதடையின்றி நடைபெற வேண்டும் என்பதற்காகவும் ‘மணல் திருட்டு ஒழிப்பு’, ‘விலையேற்றத்தைத் தடுக்க நடவடிக்கை’ என்று கண் துடைப்பு நாடகத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரங்கேற்றி இருக்கிறார்.

அதே போன்றதொரு இயற்கை வள மோசடிக்கு இந்த 70 மணல் குவாரிகளை பயன்படுத்தி, சுற்றுப்புறச் சூழலுக்கும், விவசாயத்திற்கும் கேடு விளைவிக்கும் செயலில் இந்த ‘குதிரை பேர’ அரசு ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. 70 மணல் குவாரிகள் திறப்பதை ‘குதிரை பேர’ அ.தி.மு.க. அரசு கைவிட வேண்டும்.

அப்படி கைவிடத் தவறினால், புதிதாக மணல் குவாரிகள் திறக்கப்படும் இடங்களில் ஆங்காங்கே உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் ஆதரவுடன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அறவழியில் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.