மதுரை,

மிழகத்தில் உரிய அனுமதியின்றி போராட்டம் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை ஐகோர்ட்டு  கிளையில் வழக்கறிஞர் எபினேசர் சாமுவேல் என்பவர் தொடர்ந்த பொது நல வழக்கில் நீதிபதிகள் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் உரிய அனுமதியில்லாமல், போராட்டம், சாலைமறியல் என்ற பெயரில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை எனக் கூறியுள்ளார். இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள், அலுவலகங்களுக்கு செல்பவர்கள் மட்டுமின்றி, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகால சேவைகளும் பாதிப்பதாக கூறி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் செல்வம், ஆதிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஆஜரான அரசு தரப்பு கூடுதல் வழக்கறிஞர், தமிழகத்தில் அனுமதியில்லாமல் போராடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறினார்.

இந்த பதிலில், திருப்தி அடையாத நீதிபதிகள், உரிய அனுமதியில்லாமல் நடத்தப்படும் ஆர்ப்பாட்டம், சாலைமறியல் உள்பட பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் அனைத்து வகை போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறை டி.ஜி.பிக்கு உத்தரவிட்டார்.

உரிய அனுமதியின்றி அதிக அளவில் கூடினாலும் கடும் நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்த நீதிபதிகள், சிறுவர், சிறுமிகள், குழந்தைகளை போராட்டங்களுக்கு அழைத்துவந்தால், கைது செய்யமாட்டார்கள் என போராட்டக்காரர்கள் கருதுவது கண்டனத்துக்குரியது என்றும் தெரிவித்தனர்.

சமீப காலமாக டாஸ்மாக் மற்றும் மத்தியஅரசின் மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராக பொதுமக்கள், மாணவர்கள் திரண்டு போராடி வருகின்றனர்.

இதை தடுக்கவே இதுபோன்ற வழக்கு தொடரப்பட்டு இருப்பதாகவும், அதற்கு ஆதரவாக மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியிருப்பதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

ஏற்கனவே  பொதுமக்களுக்கு விரோதமாக, பெப்சி, கோக் போன்ற ஆலைகளுக்கு ஆதரவாக மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் தீர்ப்பு கூறியுள்ள நிலையில், தற்போது பொதுமக்களின் நலனுக்காக போராடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியிருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.