சென்னை:
கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தமிழகத்தில் சிக்கித்தவிக்கும்  புலம்பெயர் தொழிலாளர்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வேண்டும்  என தமிழக அரசுக்கு  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கொரோனா ஊரடங்கு ஜூன் 30ந்தேதி வரை 5வது கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு 2 மாதத்துக்கும் மேலாக தொடர்பாக புலம்பெயர் தொழிலாளர்கள், தினக்கூலிகள், அமைப்புசாரா தொழிலாளர்கள் கடுமையான பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
இந்த நிலையில், வழக்கறிஞர் சூரியபிரகாசம்  என்பவர்,  கொரோனா ஊரடங்கு காரணமாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் சிக்கியுள்ள 400க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்ட தமிழகஅரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனுமீதான விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதிகள்   கிருபாகரன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில்விசாரணை நடைபெற்றது. . அப்போது,  வெளி மாநிலங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றனவா என்பதை அறிந்து கொள்ள இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தையும், தமிழக தலைமைச் செயலாளரையும் எதிர்மனுதாரராகச் சேர்த்து உத்தரவிட்டது.
மேலும்,  புலம்பெயர் தொழிலாளர்களுக்கு செய்த உதவிகள் என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக  மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்திருந்தனர்.
இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய மாநில அரசுகள் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து,  சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.