புதுடெல்லி:
பொது இடங்கள், சாலைகள் போராட்ட கூடாரமாவதை ஏற்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஷாகீன் பாக் பகுதியில் ஊரடங்கு காலம் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதனிடையே, சாலையை மறித்து நடைபெற்ற இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதை தடுக்க கோரி வக்கீல் அமித் சகானி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

நீதிபதிகள் அளித்த தீர்ப்பில்,

காலனியாதிக்க இந்தியாவில் விதைக்கப்பட்ட போராட்ட விதைகள், ஜனநாயகத்தில் பூக்களாக மலர்ந்துள்ளன. காலனியாதிக்க இந்தியாவில் எதிர்ப்பை காட்ட நடைபெற்ற போராட்டங்களும், ஜனநாயக சுயாட்சியில் எதிர்ப்பை தெரிவித்து நடைபெறும் போராட்டங்களும் சரிநிகராக கொள்ள முடியாது. போராடுவதற்கான உரிமையும், மாற்று கருத்துகளை தெரிவிக்கும் உரிமையும் அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டு உள்ளன.

நியாயமான கட்டுப்பாடுகளுக்கும், நாட்டின் பொது அமைதி, ஒருமைப்பாடு, இறையாண்மை ஆகியவற்றின் நலன்களுக்கு உட்பட்டும், காவல்துறை கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டும் போராட்ட உரிமைகள் இருக்க வேண்டும்.

சட்டத்திற்கு எதிராக அமைதி வழியில் போராடும் உரிமையை மதிப்பளிக்கும் நிலையில், ஷாகீன் பாக் போன்ற பொது இடங்களையும், சாலைகளையும் காலவரையற்று அடைத்து வைக்கக்கூடாது என்பதை தெளிவுபடுத்துகிறோம். ஜனநாயகமும், போராட்டமும் கைகோர்த்து செல்ல வேண்டும். ஆனால், எதிர்ப்பை காட்டும் போராட்டங்கள் அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் தான் நடைபெற வேண்டும். பொது இடங்கள், சாலைகள் போராட்ட கூடாரமாவதை ஏற்க முடியாது.

அனுமதியின்றி பொது இடங்களையும், சாலைகளையும் அடைக்கும் போராட்டங்களால் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய கடமையில் இருந்து அரசு நிர்வாகம் தப்பிக்க கூடாது. ஷாகீன் பாக் போன்ற சாலைகளை அடைத்து போராட்டம் செய்வது எதிர்காலத்தில் நடைபெறக்கூடாது.

டிஜிட்டல் யுகத்தில் வளர்ந்துள்ள சமூக வலைதளங்களில் பயனற்ற உரையாடல்களால் இக்கட்டான சூழலையும், பயனற்ற விளைவுகளையும் உருவாக்கியதை ஷாகீன் பாக் விவகாரத்தில் காண முடிந்தது என தீர்ப்பில் தெரிவித்துள்ளது.