சென்னை,

மைச்சர்கள் மூலம் மாவட்டங்களில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி செய்யப்பட வேண்டும் என்று அனைத்து  மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

தமிழக்ததில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மக்களிடையே நன்மதிப்பை பெறும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

முதலமைச்சரின் மக்கள் குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான மனுக்கள் குவிந்து வரும் நிலையில், மனுக்கள் மீதான நடவடிக்கை எடுக்கப்பட்டு, பயனாகிளுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற வேண்டும் என்றும் தமிழக முதல்வர் அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது,

“முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம்” குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.“முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம்”, முதலமைச்சரால் சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் 18.7.2019 அன்று அறிவிக்கப்பட்டு, 19.8.2019 அன்று சேலம் மாவட்டத்தில் துவக்கி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் இந்தத் திட்டத்தின் கீழ் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பொது மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றனர்.

இத்திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 9,72,216 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 5,11,186 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 4,37,492 மனுக்கள் பல்வேறு காரணங்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. மீதமுள்ள 23,538 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து இந்த வார இறுதிக்குள் முடிவு செய்ய முதலமைச்சரால் அறிவுறுத்தப்பட்டது.

ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுக்களில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித் தொகை வழங்க 1,43,993 மனுக்களும், பட்டா மற்றும் நிலம் சார்ந்த 1,83,682 மனுக்களும், கிராமம், நகரம் உட்கட்டமைப்பு சார்ந்த 50,488 மனுக்களும், பொது விநியோகத் திட்டம் குறித்து 10,108 மனுக்களும், சமூக நலத் துறை தொடர்பாக 12,136 மனுக்களும், அடிப்படை வசதிகள், பொது சுகாதாரம், போக்குவரத்து சார்ந்த 12,979 மனுக்களும், வேளாண்மை, கால்நடை துறை, மீன்வளத்துறை சார்ந்த 6,137 மனுக்களும்,சான்று நகல்கள் வேண்டி 274 மனுக்களும், ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலம் சார்ந்த 7,671 மனுக்களும், பல்வேறு வகை சான்றுகள் வேண்டி 7,665 மனுக்களும், ராணுவத்தினர் சார்ந்த 1,476 மனுக்களும், முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டம் சார்ந்த 1,486 மனுக்களும், இயற்கை பேரிடர் சார்ந்த 1,121 மனுக்களும், கல்வித் துறை சார்ந்த 827 மனுக்களும், சட்டம் ஒழுங்கு, புகார் தொடர்பாக 616 மனுக்களும், மீனவர் நலம் சார்ந்த 385 மனுக்களும், பிறப்பு பதிவு சார்ந்த 121 மனுக்களும், முன்னாள் படைவீரர் சார்ந்த 46 மனுக்களும், பிற மனுக்களாக 69,975 மனுக்களும் அடங்கும்.

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சரின் உத்தரவு வருமாறு:-

* நிலுவையில் உள்ள 23,538 மனுக்கள் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு 15.11.19க்குள் தீர்வு காணவும்.

* பல்வேறு காரணங்களால் ஏற்றுக்கொள்ளப்படாத மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மறு ஆய்வு செய்து ஏற்றுக்கொள்ள வாய்ப்புள்ள இனங்களில் உரிய தீர்வு காணவும்.

* தீர்வு கண்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட மனுக்களின் பயனாளிகளுக்கு வட்ட அளவில் குறைதீர்வு கூட்டங்கள் ஏற்பாடு செய்து அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்,

* மேலும் இம்மனுக்கள் மீதான வட்டார அளவிலான குறை தீர்வு கூட்டம் முதலமைச்சர் வரும் 9.11.19 அன்று சேலம் மாவட்டம், எடப்பாடி தாலுகா, கொங்கனாபுரம் ஒன்றிய அலுவலகத்தில் தொடங்கி வைக்கவும், அதைத் தொடர்ந்து மாவட்டம்தோறும் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தலைமையில் 20.11.19ஆம் தேதிக்குள் வட்டார அளவில் கூட்டம் நடத்தப்பட்டு பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ளும் வகையில் வருவாய்த் துறை நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் க.சண்முகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் (பொறுப்பு) ககன்தீப் சிங் பேடி, முதன்மைச் செயலரும், வருவாய் நிர்வாக ஆணையருமான டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இயக்குநர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ந.வெங்கடாசலம் ஆகிய உயர் அலுவலர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.