புதுச்சேரி:

புதுவையில் பா.ஜனதாவை சேர்ந்த 3 பேரை மத்திய அரசு நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து, அவர்களுக்கு கவர்னர் கிரண்பேடி ரகசியமாக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நியமன எம்எல்ஏக்களின் பதவி செல்லாது என்று புதுச்சேரி சட்டசபை சபாநாயகர் அதிரடியாக கூறி உள்ளார்.

புதுச்சேரியில் பாரதியஜ தா காலூன்ற ஏதுவாக, புறவாசல் வழியாக 3 பாரதியஜனதா கட்சியை சேர்ந்த மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், கல்வியாளர் செல்வகணபதி  ஆகியோரை நியமன எம்எல்ஏக்களாக மத்திய அரசு நியமனம் செய்தது. அவர்களுக்கு கவர்னர் கிரண்பேடி அவசரம் அவசரமாக ரகசிய பிரமாணம் செய்து வைத்தார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு அனுமதியின்றி, மத்திய அரசு பா.ஜ.கவினர் 3 பேரை நியமனம் செய்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இதற்கு காரணமாக கவர்னர் கிரண்பேடி மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று அனைத்து கட்சிகள் சார்பில் கடந்த 8ந்தேதி மாநிலம் தழுவிய பந்த் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து கவர்னரால் பதவி பிரமாணம் செய்யப்பட்ட 3 பேரும்,  சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயரை சந்தித்து நாங்கள் 3 பேரும் கவர்னர் மூலம் நியமன எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றுள்ளோம்.

எங்களை பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களாக அங்கீகரித்து உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். எங்களுக்கு அலுவலக அறையும் ஒதுக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்தனர்.

இந்த நிலையில் கவர்னரின் செயலாளர் தேவநீதிதாசிடம் இருந்து சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயர் மூலம் சபாநாயகருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய 3 பேருக்கும் கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார். இதை ஏற்றுக்கொண்டு அவர்களை எம்.எல்.ஏ.க்களாக பணியாற்ற அனு மதிக்கும்படி கூறப்பட்டிருந்தது.

கவர்னர் – சபாநாயகர்

இந்த கடிதத்தை வின்சென்ட் ராயர் சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் வழங்கினார். அதை பெற்றுக்கொண்ட அவர் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த தகவல்களை படித்து பார்த்தார்.

பின்னர் கவர்னரின் கடிதத்தை ஏற்க முடியாது என்று கூறி அதை திருப்பி அனுப்ப உத்தரவிட்டார்.

இந்த கடிதத்தை ஏன் ஏற்க முடியாது என்பது குறித்து அதில் குறிப்புகளை யும், சபாநாயகர் எழுதி அனுப்பி இருக்கிறார்.

அதில், நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் 3 பேரும் என்னிடம் மத்திய அரசு கடிதத்தை காண்பித்தார்கள். அதில் 3 பேர் பெயர் மட்டும் தான் இருந்தது.

அவருடைய தந்தை பெயர் முகவரி போன்ற எந்த விவரங்களும் இல்லை. எனவே முழு தகவல்கள் அடங்கிய உத்தரவு இருந்தால் தான் பதவி பிரமாணம் செய்து வைக்க முடியும் என்று கூறினேன்.

மேலும் 3 பேர் எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டதற்கான உத்தரவு எதுவும் சபாநாயகர் அலுவல கத்துக்கு நியமிக்கும் அதிகாரம் உள்ள உரிய நபர்களிடம் இருந்து உத்தரவு வரவில்லை.

எனவே நான் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கவில்லை. ஆனால் நீங்கள் (கவர்னர்) அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து இருக்கிறீர்கள்.

சபாநாயகர் இருக்கும் போது, அவர்தான் எம்.எல்.ஏ.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும். அவரையும் மீறி கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது.

தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்படும் நபருக்கு மட்டுமே எம்.எல்.ஏ. பதவி பிரமாணத்தை செய்து வைக்க கவர்னருக்கு அதிகாரம் உள்ளது. மற்ற எம்.எல்.ஏ.க்களுக்கும், நியமன எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் தான் பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும்.

எனவே நீங்கள் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தது செல்லாது. நான் அவர்களை எம்.எல்.ஏ. வாக பணியாற்ற அனுமதிக்க முடியாது.

இவ்வாறு சபாநாயகர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

ஏற்கனவே இது குறித்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருக்கின்ற நிலையில், தற்போது சபாநாயகர் அதிகாரத்தில் கவர்னர் தலையிட முடியாது என்று சபாநாயகர் அறிவித்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக கவர்னரால் பதவி பிரமாணம் பெற்ற 3 பேரும் சட்டமன்ற உறுப்பினராக செயல்பட முடியாத  சூழல் ஏற்பட்டுள்ளது.