புதுச்சேரி:
ட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா உறுதியான நிலையில், இன்றைய சட்டமன்ற கூட்டம் சட்டமன்ற வளாகத்துக்கு வெளியே மரத்தடியில் நடைபெற்றது. அதையடுத்து,  புதுச்சேரி சட்டமன்றக் கூட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கீடு மசோதா நிறைவேறியதை அடுத்து காலவரையின்றி சட்டப்பேரவை ஒத்திவைப்பதாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் இதுவரை 2,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.  இந்த நிலையில், கடந்த 20ந்தேதி மாநில சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. நேற்று கவர்னர் கிரண்பேடி 3நாளுக்கு பிறகு சட்டமன்றத்தில் உரையாற்றினார்.

இந்த நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த  கதிர்காமம் தொகுதி  எம்.எல்.ஏ-வான என்.எஸ்.ஜே. ஜெயபாலுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்பபட்ட தகவல் வெளியானது. இதையடுத்து அவர்  இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

என்.எஸ்.ஜே. ஜெயபால் கடந்த 3 நாட்களாக சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றதால், இன்றைய கூட்டத் தொடரை சட்டமன்றத்தை விட்டு வெளியே நடத்த சபாநாயகர் முடிவு செய்தார். அதன்படி, சட்டமன்றத்திற்கு வெளியே மரத்தடி பகுதியில் தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டு சபை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தொடரில், நிதி ஒதுக்கீடு மசோதா குறித்து விவாதம் நடைபெற்றது. விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசுக்கு 50% இட ஒதுக்கீடு அளிக்க சட்டவரைவு இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிந்துரை வந்தவுடன் சட்டசபையை கூட்டி சட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறினார். அதைத் தொடர்ந்து ஒருமனதான மசோதா  நிறைவேற்றப்பட்டது.
அதையடுத்து, புதுச்சேரி சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
 

எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் முதல்வர் நாராயணசாமி, மற்றும் அமைச்சர்கள், ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள், பேரவையில் நேற்று ஆளுநர் உரை நிகழ்த்திய கிரண் பேடி, செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் என அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.