புதுச்சேரி: அதிகரிக்கும் கொரோனா பரவல் எதிரொலியால் தமிழகத்தில் இருப்பவர்கள் புதுச்சேரிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் மொத்தமாக 216 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 113 பேர் சிகிச்சையில் உள்ளனர். 99 பேர் குணமடைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர், டிசம்பரில் நோய் தொற்று அதிகமாகும் என மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது.

இந் நிலையில், தமிழகத்தில் இருப்பவர்கள் புதுச்சேரிக்கு வர அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி இதனை அறிவித்து உள்ளார். அவர் மேலும் கூறியதாவது: நாளை முதல் புதுச்சேரியின் கடலூர், விழுப்புரம் எல்லைகள் சீல் வைக்கப்படும்.

மருத்துவ சேவைக்கு மட்டுமே மக்கள் அனுமதிக்கப்படுவர். வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் வரும்போது நோய் தொற்று இல்லை என சான்றிதழுடன் வந்தால் தான் அனுமதி தரப்படும். சென்னையில் இருந்து இ பாஸ் கொண்டு வந்தாலும் புதுச்சேரிக்குள் அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளார்.