புதுச்சேரி:

புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில், இன்று ஒரே நாளில், புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிப்பு எண்ணிக்கை, 194 ஆக அதிகரித்துள்ளது.

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனோ தொற்று அதிகரித்து வரும் வேலையில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 18 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு 194 ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் அனைவரும் புதுச்சேரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, காரைக்கால், மாஹே அரசு மருத்துவமனைகள் மற்றும் ஜிப்மரில் என 99 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் 91 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர், நேற்று இரவு ஒரு முதியவர் உரிழந்ததையொட்டி உயிரிழப்பு 4 ஆக உயர்ந்துள்ளது என புதுச்சேரி சுகாதார துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் புதுச்சேரியில் நேற்று 12 பேர் இன்று 18 பேர் என தொற்று அதிகரித்து கொண்டே வருகின்றது. இதை பார்க்கும் போது கொரோனா தொற்றின் தாக்கம் புதுச்சேரியில் தீவிரமடைய தொடங்கி விட்டதையே காட்டுகின்றது. ஆகவே இதை எதிர்கொள்ள வேண்டும் என்றால் மக்கள் தங்களை சுயகட்டுப்பாட்டுடன் வைத்திருக்க வேண்டும் எனவும், வெளியில் அதிகம் சுற்றுவதை நிறுத்திக்கொண்டு முககவசம் அணிவதை கட்டாயாமாக்கிக்கொண்டு விரதம் இருப்பது போல் தங்களை தாங்களே கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை இயக்குநர் மோகன் குமார் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில் ஊரடங்கை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசிக்க புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசிய முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரிக்கு அதிக நிதி ஒதுக்க பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஊரடங்கு விதிகளை கடைப்பிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.