புதுச்சேரியில் காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடையும் நிலையில், இருசக்கர வாகனத்தில் முதலமைச்சர் நாராயணசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

புதுச்சேரியில் காமராஜ் நகர் தொகுதிக்கு வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஜான்குமார் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் என்.ஆர் காங்கிரஸ் சார்பில் புவனேஸ்வரன் போட்டியிடுகிறார். தொகுதியில் அதிமுகவுக்கு செல்வாக்கு இருந்தாலும், பாஜக – என்.ஆர் காங்கிரஸ் கட்சி இடையேயான கூட்டணி உரசல் காரணமாக, காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாகவே களம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இத்தொகுதியில் இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது.

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு தனது கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் மற்றும் திமுக நிர்வாகிகளுடன் புதுவை முதல்வர் நாராயணசாமி இருசக்கர வாகனத்தில் பயணித்த படி பிரச்சாரம் மேற்கொண்டார். நாரயணசாமியின் பிரச்சார முறை, அப்பகுதி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.

வரும் 21ம் தேதி இத்தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், 24ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.