புதுச்சேரி: விழுப்புரம் புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து  காவல்துறையினரால் முழுவதும் மூடப்பட்டது.

புதுச்சேரியில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதிக அளவாக, இன்று ஒரே நாளில் 30 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அமைச்சரவைக் கூட்டப்பட்டு, தமிழகத்தைச் சேர்ந்தோர் புதுச்சேரிக்கு வர தடை விதிக்க முடிவு எடுக்கப்பட்டு அமலுக்கும் வந்தது.

அதன் காரணமாக புதுச்சேரியின் பிரதான எல்லைகளான முள்ளோடை, கோரிமேடு, கனகசெட்டிக்குளம், மதகடிப்பட்டு, திருக்கனூர் ஆகிய பகுதிகளில் கடும் சோதனை செய்யப்பட்டது.

விழுப்புரம் புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை மதகடிப்பட்டில் போக்குவரத்து  காவல்துறையினரால் முழுவதும் மூடப்பட்டது. இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவிற்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதனால்  அங்கு வந்து செல்லும் கனரக வாகனங்கள் மற்றும்  இருசக்கர வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.