புதுச்சேரி: புதுச்சேரியில் முன்னாள் அமைச்சர் ஏழுமலை இன்று கொரோனாவால் உயிரிழந்தார்.

கடந்த 1998ம் ஆண்டில் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் ஊசுடு தொகுதியில் த.மா.கா வேட்பாளராக களமிறங்கினார் ஏழுமலை. அந்த தேர்தலில் வெற்றி பெற்றார். 2001ல் நடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

2006ம் ஆண்டு தேர்தலில், சுயேட்சையாக போட்டியிட்டு, எம்.எல்.ஏ ஆனார். பின், காங்கிரசுக்கு ஆதரவு அளித்து, பாசிக் சேர்மன் பதவியைப் பெற்றார். அடுத்தத் தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால், தி.மு.கவில் இணைந்து போட்டியிட்டார்.

ஆனால்,  என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வி கண்டார்ர். இதையடுத்து 2011ல் மீண்டும் காங்கிரஸில் இணைந்தார். பங்கூரில் வசித்து வந்த அவருக்கு சில நாட்களுக்கு முன்பு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு கொரோனா தொற்று உறுதியானது. பின்னர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார்.