புதுச்சேரியில் மின் கட்டணம் 50 சதவிகிதமாக குறைக்கப்படும் என்றும்  ரேஷனில் இனி 30 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்றும் முதல்வர் பொறுப்பேற்ற நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி 14-வது சட்டப்பேரவையின் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் இன்று பிற்பகல் பதவி ஏற்றுக்கொண்டார்கள்.
இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவைக்கு வந்த முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறையில் அமர்ந்து பொறுப்பேற்றுக் கொண்டனர். பிறகு முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அரை மணி நேரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், தலைமைச் செயலர் மனோஜ் பரிதா, அரசு செயலர்கள் ராகேஷ் சந்திரா, கந்தவேலு, சுந்தரவடிவேலு ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
swearing_2883901f
இதன் பிறகு முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“முதலாவதாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 6 முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம்.

  1. இதுவரை வழங்கப்பட்டு வந்த 10 கிலோ இலவச அரசி தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி படிப்படியாக உயர்த்தி வழங்கப்படும். முதல் கட்டமாக ஆகஸ்ட் மாதம் முதல் 20 கிலோ அரிசி வழங்கப்படும். தேர்தல் காலத்தில் மூன்றுமாதம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 30 கிலோ அரிசி உடனடியாக கொடுக்கப்படும்.
  2. மீனவர்களுக்கு டீசல் மானியம் உயர்த்தி வழங்கப்படுகிறது. அதன்படி மரம் மற்றும் பைபர் படகுகளுக்கான டீசல் மானியம் 35 ஆயிரம் லிட்டரில் இருந்து 40 ஆயிரம் லிட்டராகவும், எப்.ஆர்.பி. படகுக்கு 25 ஆயிரம் லிட்டரில் இருந்து 35 ஆயிரமாகவும், 20 அடி உயர எப்.ஆர்.பி. படகுக்கு 5 ஆயிரம் லிட்டரில் இருந்து 6 ஆயிரம் லிட்டர் வரையும் உயர்த்தி வழங்கப்படும்.

3.விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். மருத்துவ இடர்பாடு திட்டத்தின் கீழ் மருத்துவ நிதியுதவி பெறுவதற்கான வருமான உச்சவரம்பு 75 ஆயிரத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்படும். அதுபோல் நிதியுதவியும் ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்படும்.

  1. ஆதிதிராவிட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அவர்களின் மேம்பாட்டிற்கு மட்டுமே செலவு செய்யப்படும்.
  2. மின் நுகர்வோர் கட்டணம் 50 சதவீதம் குறைக்கப்படும். முதல் கட்டமாக 100 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 50 சதவீதம் வரை கட்டணம் குறைக்கப்படும். இதன் மூலம் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் பயனடைவர்.
  3. சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் வைத்திருப்பது, தரமான கல்வி, இளைஞர் முன்னேற்றம், பெண்கள் பாதுகாப்பு ஆகியவைகள்தான் எங்களது திட்டம்” என்று நாராயணசாமி அறிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், “கவர்னரின் எண்ணமும், எங்களின் எண்ணமும் ஒன்றாக இருப்பதால் அவருடன் இணைந்து பணியாற்றுவோம். அரசு ஊழியர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும். உழவர்கரை மற்றும் புதுச்சேரி நகராட்சிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரிக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கும் ஏற்பாடு செய்வோம்.
நான் அரசு வாகனத்தை பயன்படுத்த மாட்டேன். சைரன் ஒலி வைத்து கொள்வது குறித்து மற்ற அமைச்சர்களுடன் பேசி முடிவு எடுக்கப்படும். என்.ஆர். காங்கிரஸ் அரசு ஊழல்கள் குறித்து கட்டாயம் நடவடிக்கை எடுப்போம். அமைச்சரவைக்கு இலாக்கக்கள் ஒதுக்கப்படுவது குறித்து தெரிவிக்கப்படும். ஆளுநருக்கும், ஆட்சியாளர்களுக்குமான உறவு சுமூகமாக உள்ளது”  என்று நாராயணசாமி தெரிவித்தார்.