புனே

புனே காவல்துறையினர் அரிய விலங்கான எறும்புண்ணியை கடத்தி விற்க முயன்றதாக இருவரை கைது செய்துள்ளனர்.

எறும்புண்ணி என்னும் விலங்கு அரிய விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்த மிருகத்தின் மேல் உள்ள தோல் செதில்கள் மிகவும் அரிதானதாகும்.   இந்த செதில்கள் மூலம் தயாரிக்கப் படும் மருந்துகள் ஆஸ்துமா, முடக்கு வாதம் மற்றும்  கீல் வாதம் ஆகியவைகளுக்கு குணம் அளிக்க கூடியதாகும்.   எனவே சர்வ தேச சந்தையில் இந்த விலங்குக்கு ரூ.50 லட்சம் வரை மதிப்பு உள்ளது.

ராமசந்திர தினகர் கெய்க்வாட் மற்றும் சூரஜ் தனாஜி பால்கே ஆகிய இருவரும் புனே அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் ஆவார்கள்.   தங்கள் நிலத்தில் ஒரு எறும்புண்ணியை கண்டுள்ளனர்.   அதை பிடித்து ஆன்லைன் மூலம் அதற்கு நல்ல மதிப்பு இருப்பதை தெரிந்து புனேவில் விற்க முயன்றுள்ளன்ர்.

இந்த தகவல் அறிந்த காவல்துறையினர் அவர்களை பிடிப்பதற்காக வியாபாரிகள் போல் வேடமிட்டு தனியார் வாகனங்களில் சென்று சீருடை அணியாமல் குறிப்பிட்ட இடத்தில் காத்திருந்தனர்.    இது பற்றி தெரியாத இருவரும் எறும்புண்ணியை ஒருசாக்கில் போட்டு எடுத்து வந்துள்ளனர்.  அவர்களை காவல்துறையினர் கைது செய்து வழக்கு பதிந்துள்ளனர்.