புதுடெல்லி:
த்திய அரசின் விவசாய மசோதாக்களுக்கு எதி்ர்ப்பு தெரிவித்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில்( என்டிஏ) நெடுங்காலமாக அங்கம் வகித்துவந்த சிரோமணி அகாலி தளம், கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது.

மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த விவசாய மசோதாக்கள், அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற மழைக்கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே இந்த மசோதாக்களை மத்திய

பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.

விவசாய மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு ஒருபுறமிருக்க, பாஜக தலைமையிலான எம்டிஏ கூட்டணியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக அங்கும் வகித்துவந்த சிரோமணி அகாலி தளம் கட்சியும் இந்த மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அத்துடன் அக்கட்சியைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கௌர் பாதல், தமது மத்திய அமைச்சர் பதவியை அண்மையில் அதிரடியாக ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக சிரோமணி அகாலி தளம் தற்போது அதிரடியாக அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத் தலைநகர் சண்டீகரில் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

கட்சியின் இந்த அதிரடி முடிவு குறித்து சுக்பிர் சிங் பாதல் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “விவசாய விளைப்பொருள்களுக்கான குறைந்த ஆதார விலை விவசாயிகளுக்கு உறுதி செய்யும் அம்சத்தை புதிய மசோதாவில் இடம்பெற செய்ய வேண்டும் என்று மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தினோம். விவசாயிகளின் நலன்சார்ந்த எங்களது இக்கோரிக்கை மத்திய பாஜக அரசு ஏற்பதாக இல்லை.

இதேபோன்று பஞ்சாபி மொழிக்கு, சீக்கியர்களுக்கும் எதிராக தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. எனவே, இனி மேலும் பாஜக கூட்டணியில் நீடிப்பது சரியாக இருக்காது எனக் கருதி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவது என்று கட்சியின் உயர்நிலை கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது”: என்று பாதல் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்தியமைச்சர் ஹர்சிம்ரத் கௌர் பாதல் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ” விவசாய மசோதாக்களில் தங்களது பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று கோடி விவசாயிகள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் அவர்களின் வலியை மத்திய பாஜக அரசு கொஞ்சமும் உணர்வதாக தெரியவில்லை. இதன் விளைவாக நாங்கள் கூட்டணியில் வெளியேறியுள்ளோம். வாஜ்பாய்- பாதல் ஆகிய இரு பெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்ட கூட்டணி, மத்திய அரசின் பிடிவாதத்தால் முறிந்துள்ளது” என்று கௌர் பாதல் தமது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.