திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று இரவு 7.30 மணியில் இருந்து நள்ளிரவு 1 மணிவரை கருட வாகன வீதிஉலா (கருடசேவை) நடக்கிறது.

கருட சேவையின்போது  மூலவருக்கு அணிவிக்க திருப்பதி வந்தது ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகள் திருமலை வந்தடைந்தது.

திருப்பதியில் நடைபெற்று வரும் புரட்டாசி பிரமோற்சவத்தை முன்னிட்டு இன்று கருட சேவை நடைபெற இருக்கிறது. இதற்காக நேற்று ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகள், பட்டு வஸ்திரம், கிளிகள் ஆகியவை வாகனங்களில் பலத்த பாதுகாப்போடு திருமலைக்கு கொண்டு வரப்பட்டன.

இன்று திருமலை வந்த அந்த  மாலைகள், பட்டு வஸ்திரம், கிளிகள் ஆகியவற்றை கூடைகளில் வைத்து திருமலையில் உள்ள ஜீயர் மடத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு வைத்து சிறப்புப்பூஜை செய்யப்பட்டது.பி ன்னர் ஜீயர் மடத்தில் இருந்து மாலைகள், பட்டு வஸ்திரம், கிளிகள் திருமலையில் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்துச்சென்று ஏழுமலையான் கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டன.

ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகளில் ஒன்று, இன்று (புதன்கிழமை) மூலவருக்கு அணிவிக்கப்படுகிறது. மற்றொரு மாலை, பட்டு வஸ்திரம், கிளிகள் கருடசேவையின்போது கருட வாகனத்தில் எழுந்தருளும் உற்சவர் மலையப்பசாமிக்கு அணிவிக்கப்படுகிறது.

அத்துடன் ஏழுமலையான் கோவிலில் மூலவருக்கு அணிவிக்கப்படும் மகர கண்டி எனப்படும் லட்சுமி ஆரமும் அணிவிக்கப்படும்.