டெல்லி: நாடே கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டு, ஆக்சிஜனுக்காக அல்லல்பட்டுக்கொண்டிருக்கையில்,  ரூ.13ஆயிரம் கோடியில் விஸ்டா திட்டம் தேவையா என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலையின் தாக்கம் வீறுகொண்டு பரவி வருகிறது. இதனால், கொரோனா நோயாளிகள் ஆக்சிஜ்ன் மற்றும் மருந்து பற்றாக்குறையால் உயிரிழந்து வருகின்றனர் கொரோனா பரவலை தடுக்க பல மாநிலங்களில் பொதுமுடக்கம், பகுதி நேர முடக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  இதனால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. இந்த நிலையில், மத்திய அரசு புதிய பாராளுமன்ற கட்டிடம் மற்றும் பிரதமர் மற்றும் எம்.பி.க்களுக்கான வீடுகள் விஸ்டா திட்டம் என்ற பெயரில் கட்டி வருகிறது. இது சர்ச்சையாகி உள்ளது.

நாட்டில் மக்கள் சுவாசிக்க ஆக்சிஜன் இல்லாத நிலையில் மத்திய அரசு சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை நிறுத்த வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,  ஆக்ஸிஜன், தடுப்பூசிகள், மருத்துவமனை படுக்கைகள், மருந்துகள் பற்றாக்குறையால் நாட்டு மக்கள் தவித்துக் கொண்டிருக்கும்போது, மத்திய அரசு ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை நிறுத்திவிட்டு அந்தத் தொகையை கொரோனா செலவினங்களுக்குப் பயன்படுத்த வேண்டும்.

புதிய நாடாளுமன்றக் கட்டுமான திட்டம் போன்றவை மத்திய அரசின் முன்னுரிமை எவற்றில் உள்ளது என்பதைக் காட்டுகிறது என பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.

மோடி அரசின் லட்சிய திட்டமான  மத்திய விஸ்டா திட்டத்தன் கீழ் பிரதமரின் வீடு உள்பட பல்வேறு கட்டிடங்கள் கட்டுப்பட்டு வருகிறது. இந்த  லட்சிய திட்டம் 2022 டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும் வகையில் விறுவிறுப்பாக பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மொத்த செலவு ரூ .13,450 கோடி என மதிப்பிடப்பட்டுஉள்ளது.