சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள், மக்களிடையே வாக்குகளை பெறும் நோக்கில்  இலவசங்களை தருவதாக வாக்குறுதியை அள்ளி வீசிவருகின்றனர். ஆனால், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்,  நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் இலவசங்கள் ஒழிக்கப்படும் என்றும்,  தரமான  கல்வி மட்டுமே இலவசமாக வழங்கப்படும் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 இடங்களிலும் தனித்து போட்டியிடுகிறது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டி யிடுகிறார். நேற்று அவர் தனது பரப்புரையை தொடங்கினார்.  திருவொற்றியூர்  தேரடி, பர்மா நகர் முதன்மை சாலை மற்றும் தாளக்குப்பம் சந்தை ஆகியப் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது,  உங்களை நம்பி இந்த தொகுதியில் போட்டியிடுகிறேன் என்றவர்,  ‘அனல்மின் நிலையத்தை உருவாக்கி சாம்பலை தூவி மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து, வாழும் இடத்தை சாம்பலாக்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்த தொகுதியில், காட்டுப்பள்ளியில் 6 ஆயிரம் ஏக்கர் இடத்தை அதானி என்னும் ஒற்றை முதலாளிக்கு கொடுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க நினைக்கிறார்கள் இந்த ஆட்சியாளர்கள். அவர்களுக்கு எதிராக சமரசம் இல்லாமல் சண்ட செய்ய துணிந்து நிற்கும் பிரபாகரனின் தம்பி உங்களை நம்பி திருவொற்றியூர் தொகுதியை தேர்ந்தெடுத்து போட்டியிடுகிறேன்.

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தரமான இலவச கல்வி வழங்கப்படும்,  தரமான மருத்துவம் , ,கல்விக்கு ஏற்ற வேலை போன்றவற்றை அளிப்போம்

மக்களுக்கான இலவச திட்டங்களை அடியோடு ஒழிப்போம்

இலவசங்களை எதிர்பார்க்காத அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றப்பாடுபடுவோம்.

தண்ணீர் விற்பனைக்கு தடை செய்வோம் எனவும் உணர்ச்சி பொங்க உரையாற்றினார்.