சென்னை,

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறி உள்ளார்.

முதல்வர் பதிலில் எங்களுக்கு திருப்தி தரவில்லை என்ற திமுக சபையை விட்டு வெளிநடப்பு செய்துள்ளனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடைபெற்ற பணபட்டுவாடா குறித்து தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்ய அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில், இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டா லின் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

அப்போது, தேர்தல் ஆணைய கடிதப்படி முதல்வர் மீது வழக்கு தொடர்வது பற்றி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து விவாதிக்க ஸ்டாலின் கோரியதை,  ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா குறித்து முழு விவாதம் நடத்த முடியாது என்று சபாநாயகர் மறுப்பு தெரிவித்த தால்  சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறி உள்ளார். ஆனால், முதல்வரின் அறிவிப்பில் திருப்தி இல்லை என்று கூறி திமுகவினர் இன்றும் வெளிநடப்பு செய்தனர்.

ஏற்கனவே கூவத்தூர் பணபேர வீடியோ விவகாரம் விவாதிக்க கோரி வெளிநடப்பில் ஈடுபட்டு வந்த திமுக மற்றும் எதிர்க்கட்சிகள், இன்று, ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா தொடர்பாக வெளிநடப்பு செய்துள்ளனர்.

ஏற்கனவே, ஆர்,கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய ரெய்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்தது.

அந்த ஆவணங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் இருந்ததாக வருமான வரித்துறை யினர் தெரிவித்தனர்.

மேலும் அந்த ஆவணங்களை அவர்கள் தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பி வைத்தனர், இதையடுத்து எடப்பாடி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது எடப்பாடி தமிழக முதல்வராக இருக்கிறார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தமிழக அமைச்சர்களாக உள்ளனர். இந்நிலையில் தேர்தல் கமிஷன் உத்தரவுபடி,   ஒரு மாநில முதல்வர்மீது  காவல்துறையினர் வழக்கு பதிய முடியுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.