பாட்னா :

ஆர்.ஜே.டி. கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மனைவியும், பீகார் முன்னாள் முதல்- அமைச்சருமான ராப்ரிதேவிக்கு நேற்று 65 –வது பிறந்த நாளாகும்.

இதையொட்டி பாட்னாவில் உள்ள ராப்ரிதேவியின் இல்லத்துக்கு திரண்டு சென்ற கட்சி தொண்டர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பீகாரில் முதல்-அமைச்சர் நிதீஷ்குமாருக்கு நெருக்கமான அதிகாரிகள், வளம் கொழிக்கும் துறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பது குறித்து ராப்ரிதேவியிடம் கேட்டபோது “நிதீஷ்குமார் ஆட்சி நீண்டநாட்கள் நீடிக்காது, இதனால் தனக்கு நெருக்கமானவர்களை நல்ல பதவியில் அமர வைக்கிறார்” என பதில் அளித்தார்.

“ஆட்சி நீடிக்காது என்பதால் நிதீஷ்குமாரை விட்டு, அவருக்கு நம்பிக்கையாக இருந்த பலரும் அணி மாற தயாராகி விட்டார்கள்” என குறிப்பிட்ட ராப்ரிதேவி “அடுத்த நாட்களில், அவர்கள் கட்சி மாறும் காட்சிகளை பார்க்கலாம்” என தெரிவித்தார்.

“பா.ஜ.க. ஆதரவில் ஆட்சி நடத்தும் நிதீஷ்குமார், பதவி ஏற்கும் முன்பு இதனை யோசித்திருக்க வேண்டும்” என்று ராப்ரிதேவி மேலும் தெரிவித்தார்.

– பா. பாரதி