சென்னை:

ராதாபுரம் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், வாக்குப்பதிவின் போது பதிவான  தபால் வாக்குகளை  சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில்,  நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ராதாபுரம் சார்நிலை கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்த தபால் வாக்குப் பெட்டிகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்பாவு, அதிமுக வேட்பாளர் இன்பதுரையிடம் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இன்பதுரை 69590 வாக்குகளும், அப்பாவு 69541 வாக்குகளும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இன்பதுரையின் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், வாக்கு எண்ணிக்கையின்போது 203 தபால் வாக்குகளை எண்ணாமல் அதிகாரிகள் நிராகரித்த தாகவும், அந்த வாக்குகளை எண்ணும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

‘இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து,  தபால் வாக்குகளை மீண்டும் எண்ணும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. மேலும், 19, 20 மற்றும் 21வது சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கத.

இதைத்தொடர்ந்தே தபால் வாக்குகள்  சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.